உத்திரபிரதேசத்தில் தலித் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
உ.பி.மாநிலம், பிலிபிட்டில் தலித் சிறுமி ஒருவரை இருவர் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்து தீ வைத்து எரித்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
16 வயது சிறுமி மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், மோசமான நிலையில் இருப்பதாகவும் காவல்துறை கண்காணிப்பாளர் தினேஷ் குமார் பிரபு கூறியுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். குற்றம்சாட்டப்பட்டவர் முதலில் சிறுமியைக் கற்பழித்து பின்னர் டீசலை ஊற்றி தீ வைத்து கொலை செய்ய முயன்றதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் செப்டம்பர் 7-ஆம் தேதி மாவட்டத்தின் மாதவ் தாண்டா பகுதியில் நடந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது. பாதிக்கப்பட்ட பெண் தனக்கு நேர்ந்த கொடுமையை விவரிக்கும் காணொளி சமூக வலைத்தளங்களில் பரவி வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
செய்தியாளர்களிடம் காவல்துறை கண்காணிப்பாளர் தினேஷ் குமார் பிரபு கூறியதாவது,
தீக்காயங்களுடன் சிறுமி செப்டம்பர் 7-ஆம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
சிறுமியின் குடும்பத்தினரின் புகாரின் பேரில் குற்றம் சாட்டப்பட்ட இருவர் மீதும் இந்தியத் தண்டனைச் சட்டம், பாலியல் குற்றங்களுக்கு எதிரான குழந்தைகள் பாதுகாப்பு(போக்சோ சட்டம்) மற்றும் பட்டியல் சாதிகள்/ பழங்குடியினர் சட்டம் ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும், கைது செய்யப்பட்ட இருவரிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும், காவல்துறை கண்காணிப்பாளர் தினேஷ் குமார் பிரபு கூறியுள்ளார்.
மாவட்ட நீதிபதி யோகேஷ் குமார் பாதிக்கப்பட்ட சிறுமியின் வாக்குமூலத்தைப் பதிவு செய்துள்ளார் என்று காவல்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.